தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல்1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.
சமாதி
தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றிவடிவமானது.
இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்குமினார்கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.

இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் தாமரைவடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.
கறுப்பு நிறத் தாஜ் மஹால் மர்மம்
தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.
No comments:
Post a Comment